போதும்
உன் நினைவுகள்,
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!
விலகிப்போனபின்
உன் நினைவுகளை மட்டும்
என்னில் ஏன்
விட்டுச் சென்றாய்..!
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!
அத்தனை சுவடுகளும்
அன்றாடம் நான் கடக்கும்
அனைத்து இடங்களில் ;
காணும்போதெல்லாம்
கானல் நீராய் முன் தோன்றி -
அங்கும் இங்குமாய்
என்னை அலைக்கழிக்கும்
உன்னுருவ நினைவுகள்
எனக்கெதற்கு..!
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!
காதல் அரும்பிய
ஆரம்பக் காலங்களும்,
கைகோர்த்துக் கதைபேசிய
கடற்கரை மணல்களும்;
காவியக் கொலைகாரனாய்
என்னைப் பார்க்கையில் -
உன்னைப்போல்
எனக்காய் வாதாட இயலா
இந்நினைவுகள்
இனியெதற்கு...!
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!
நிம்மதி என்பது
உன்னருக்கில்
உணர்ந்ததுதான்
நீ பிரிந்தபின்,
நிம்மதி தொலைத்தபின்
உன் நினைவுகள் மட்டும்
இங்கெதற்கு..!
நிச்சயம் -
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!
நிஜமற்ற உன்
நினைவுகள் வேண்டாம்,
நிலையாய் என்றும்
நீயேதான் வேண்டும்.
உன் நினைவுகளை
எடுத்துக்கொள்ளவாவது,
ஒருமுறை இங்கு
திரும்பி வந்துவிடு.
திரும்பி வந்து -
என்னையும் சேர்த்து
நீயே
எடுத்துச் சென்றுவிடு...!!
No comments:
Post a Comment