Aug 14, 2013

நினைவுகளை எடுத்துச் சென்றுவிடு..!


போதும் 
உன்  நினைவுகள்,
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


விலகிப்போனபின் 
உன் நினைவுகளை மட்டும் 
என்னில் ஏன் 
விட்டுச் சென்றாய்..!

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


அழகான நம் காதலின்
அத்தனை சுவடுகளும்
அன்றாடம் நான் கடக்கும்
அனைத்து இடங்களில் ; 

காணும்போதெல்லாம்
கானல் நீராய் முன் தோன்றி -
அங்கும் இங்குமாய்
என்னை அலைக்கழிக்கும் 
உன்னுருவ நினைவுகள் 
எனக்கெதற்கு..!

திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


காதல் அரும்பிய
ஆரம்பக் காலங்களும்,  
கைகோர்த்துக் கதைபேசிய 
கடற்கரை மணல்களும்;

காவியக் கொலைகாரனாய் 
என்னைப் பார்க்கையில் -
உன்னைப்போல் 
எனக்காய் வாதாட இயலா 
இந்நினைவுகள்
இனியெதற்கு...!  

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


நிம்மதி என்பது
உன்னருக்கில் 
உணர்ந்ததுதான் 

நீ பிரிந்தபின், 
நிம்மதி தொலைத்தபின் 
உன் நினைவுகள் மட்டும்
இங்கெதற்கு..!

நிச்சயம் -
திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!



நிஜமற்ற உன்
நினைவுகள் வேண்டாம், 
நிலையாய்  என்றும்
நீயேதான் வேண்டும்.

உன் நினைவுகளை 
எடுத்துக்கொள்ளவாவது,
ஒருமுறை இங்கு
திரும்பி வந்துவிடு.

திரும்பி வந்து -
என்னையும் சேர்த்து
நீயே
எடுத்துச் சென்றுவிடு...!!   

No comments:

Post a Comment