நான் வெளிநாடு வந்த பிறகு
எல்லாப் பௌர்ணமி தினமும்
தொலைபேசியில் என்னை அழைத்து
"வெளியில் சென்று நிலவைப் பார்...
நான் தெரிகின்றேனா..?"
என்று கேட்பாய்.
வானுயர்ந்த கட்டிடங்களுக்குள்
மறைந்துகொண்ட நிலவினைக் காணாது
பொய்யாய்
"ஆம்" என்று சொல்வேன் நான்,
என் மடிக்கணனித் திரையில்
உன் புகைப்படத்தைப் பார்த்தபடி.
பூரித்துப்போன நீ
தொலைபேசியில் எனக்கு
முத்தமழை பொழிவாய்;
உன் எச்சில் படா
முத்தச் சத்தம்
என்னை வந்தடையும் போது -
நமக்குள் மறைத்துவைக்கும்
நம் கண்ணீர்த் துளிகளும்
என்னைச் சுடும்..!
எங்கோ ஒளிந்துகொண்ட நிலவும்
எழுந்து வந்து
என்னோடு சேர்ந்து அழும்..!!
No comments:
Post a Comment