Aug 20, 2013

அவளால் காதல் செய்வேன்...!


சற்று முன்பிருந்து 
அவள் ஞாபகங்கள்.  

மனதின் ஆழத்திலிருந்து புறப்படுகின்றன 
அவள் பற்றிய சில நினைவுகள்.

நினைவுகளில் அவள் முகம் மிதந்துவருகையில்
குளித்துக்கொள்கின்றன  என்னிரு விழிகள்.

அகிலமுறங்கிய  இரவினில், 
அறையின் ஓர் ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கும் 
என் தனிமைப் படுக்கையில்
அடிக்கடி வந்து செல்வதுதான் -  
அவளுடனான இந்நினைவுகளும், 
அவளுக்கேயான என் விழிச் சாரல்களும்..!


அவள் நினைவுகளையும், 
நினைவுகளில் அவளையும் 
விடுவதாய் இல்லை..!

உறங்கிக்கொண்டிருந்த 
என் மடிக்கணனியை
அவசர அவசரமாய்
எழுப்பிவிடுகின்றேன்.

இணையத்தை இணைத்துக்கொண்டு
எனக்கும் அவளுக்குமேயான  மின்னஞ்சலின்   
இரகசிய இலக்கத்தை
தட்டிவிடுகின்றேன்.

திறந்துகொள்கிறது
என் காதல் டயரி.

அனைத்தும் 
அவளிடமிருந்து.

நிறைய நிறைய 
காதலுடன், எனக்காக..!  



அவள் கொஞ்சல்களையும், கெஞ்சல்களையும்
மின்னஞ்சல் வார்த்தைகளாய் வாசித்துக்கொள்கின்றேன்.

என்னைக் கண்ட ஒவ்வொரு வார்த்தைகளும்
உயிர்பெற்றுத் துள்ளிக்கொண்டெழுவதைக் காண்கின்றேன்.   

நான் கேட்டும், கேட்காமலும் அனுப்பிய 
அவள் புகைப்படங்களை
ஆசை ஆசையாய்த் தேடுகின்றேன்.

ஒவ்வொன்றிலும்  
அழகழகாய் 
அவள்...!


அவள் புருவம்
அவள் விழிகள் 
அவள் நெற்றி
அவள் கன்னம்
அவள் உதடு 
அவள் நிறம்.. 

எல்லாமே 
இன்னும் என்னை 
காதல் செய்கின்றன.

பிறந்த குழந்தையை
முதல் முதலில் பார்த்து ரசிக்கும் தாய் போல் -
அவள் புகைப்படத்தை திரையிட்டு 
அதன் முன்னாலிருந்து ரசிக்கும் - நான்.

அவளை ரசிக்கின்றேனா 
இல்லை, 
நினைவுகளைத் திரட்டி
அவள் நிழற்படத்தை     
உயிர்ப்பிக்கின்றேனா...!


வலிகளையும் தாண்டிய ஏதோவொரு இன்பம்
எனக்குள் எங்கோ 
சுரந்துகொண்டிருக்கின்றது.

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்குமென் இதயம்
இடம், வலமாய் 
மாறி மாறித் துடிக்கின்றது.

கன்னம்தாண்டி வடியும் கண்ணீரை 
கண்டுகொள்ளாதிருக்கின்றன
என் விரல்கள்.

அவள் புகைப்படதிற்கு 
உயிர்கொடுத்துக் காதல் சிந்துகின்ற
என் இதழ்கள்.

இந்த இரவுகளில் 
என்னில் இம்மாற்றம்களை 
இயல்பாக்கிவிடுகின்ற 
அவள் தந்த இக்காதல்..!


பத்திரமாய் வைத்திருக்கிறேன் -
நினைவுகளை உயிர்ப்பிக்கும் 
அவள் வார்த்தைகளையும்,
நிரந்தரக் காதல் செய்யும்
அவள் நிழற்படங்களையும்..!

நான் இருக்கும்வரையில்
அவள் நினைவுகள் 
என்னில் உயிர்வாழும்,

நான் இறந்த பின்னர் 
என் கல்லறையும்  
அவள் கவி பாடும்..!

இது -
பிரிந்த காதல்தான்;
செத்துவிடவில்லை..!


என்றும் நான் -
அவளால்
அவளைக் காதல் செய்வேன்...!!

No comments:

Post a Comment