Sep 28, 2013

************************

இதோ
இப்போ கூட
அவளை நினைத்தபடியே
கிடக்கின்றேன்.

இன்னும் கொஞ்ச நேரம்தான் -
கடமையை  முடித்துவிட்டு
நிலவும் கிளம்பிவிடும்,
அடிவானம் சிவந்து
வெளிச்சமும் வெளிவந்துவிடும்.

தூக்கமின்றி சிவந்த விழிகளுடனும்,
அவளின்றி இருண்ட முகத்துடனும் - நான்

என்
இன்னுமொரு பொழுதின்
ஆரம்பத்தில்..!

Sep 26, 2013

************************

அவளை மறந்துவிட்டதாய்
நடித்துக்கொண்டிருக்கிறது
என் மனது -
உள்ளுக்குள் அழுதுகொண்டே..!

Sep 14, 2013

************************

இன்றாவது
என் பார்வையில் அவள் தென்படக்கூடும்
என்னும் தேடலிலேயே தொடங்குகிறது
அவளில்லா என் எல்லாப் பொழுதுகளும்.

மீண்டும் ஒருமுறை
அவளை சந்திக்கும்வரை
என் இம்முயற்சிகள்
முடியப்போவதுமில்லை.

என்றோ ஒருநாள்
இப்பிரிவின் கடைசிப்பக்கத்தில்
நானும் அவளும்
முட்டிக்கொள்வோம்.

அன்று -
உள்ளுக்குள்
அழுதுகொள்ளப்போவது 
நிச்சயம்.

நானும்;
என்போல் அவளும்..!

Sep 11, 2013

************************

அடிக்கடி என்கனவில்
வந்துபோவதுதான்
அவளுடனான
சில நெருக்கக் காட்சிகள்.

கண்விழித்தும்
கலைந்து போகாக் கனவுகளில்
நீண்டு செல்வதுண்டு
ஒருசில வினாடிகள்.

விழியிலிருந்து வடியும்
அன்றைய ஆரம்பக் கண்ணீரில்
கண்ட கனவும்
மெல்லக் கரையும் -
அவள் நினைவுகளோ
விழித்தெழுந்துகொள்ளும்.

ஏனோ -
அவள் பிரிந்த பின்னும்
அவளால் ஆன இக் காதலை மட்டும்
இன்னும் இழுத்துப்பிடித்துக்கொண்டுதானிருக்கின்றது
கிறுக்குப் பிடித்த இவ்விதயம்.

Aug 28, 2013

************************

கடந்த சில வருடங்களாக எனக்கும் என் ஊருக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டுதான் வருகின்றது. கொஞ்ச காலம் கொழும்பில், இப்போ வெளிநாட்டில். என் ஊரில் நிறையப்பேர் என்னை மறந்திருப்பார்கள், எனக்கும் நிறைய முகங்கள் மறந்து விட்டன என்பதும் உண்மைதான். 
படிப்பும் பணமுமாய் அலைந்துதிரியும் வாழ்வில் சிக்குண்டு தன் மண்வாசனை மறந்த மனிதர்களின் பட்டியலில் என்  பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் என்னுள்ளும்.


"சொர்கமே என்றாலும்.... அது நம்மூர போல வருமா...." 
எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல்..!

Aug 27, 2013

************************

பணம் தேடி கடல் கடந்து வெளிநாடு வந்தேன், இருந்ததை இழந்துவிட்டு. திரும்பிப் பார்க்கும் போதுதான் அங்கிருந்து அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. எல்லாத்தையும் விட்டு விட்டு நம்ம ஊருக்கே சென்று விடு என்று மனசு சொன்னாலும்; பொருளாதார நிலைமையும், என்னில் வந்து ஒட்டிக்கொண்ட சில பொறுப்புக்களும் இங்கேயே இருந்துவிட நிர்ப்பந்திக்கின்றது. 

பெறுமதி என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை இழந்துவந்த ஒவ்வொன்றும் ஞாபகப்படுத்திகொண்டுதானிருகின்றன..!

Aug 26, 2013

************************

ஐந்து பேர் கொண்ட
அளவான அறை.

புரிந்துணர்வுகளுடன்  பூத்துக் குலுங்கும்
அழகழகான நட்பு.

உன்னுடன் பேசமுடியா துயரத்தில் 
ஓரமாய் நிற்று அழும் என் மனம்.

Aug 22, 2013

அந்த நிலவும், உன் நிழற்படமும்..!


நான் வெளிநாடு வந்த பிறகு
எல்லாப் பௌர்ணமி தினமும்
தொலைபேசியில் என்னை அழைத்து
"வெளியில் சென்று நிலவைப் பார்...
நான் தெரிகின்றேனா..?" 
என்று கேட்பாய்.

வானுயர்ந்த கட்டிடங்களுக்குள் 
மறைந்துகொண்ட நிலவினைக் காணாது  
பொய்யாய் 
"ஆம்" என்று சொல்வேன் நான்,
என் மடிக்கணனித் திரையில்
உன் புகைப்படத்தைப் பார்த்தபடி.

பூரித்துப்போன நீ
தொலைபேசியில் எனக்கு
முத்தமழை பொழிவாய்;

உன் எச்சில் படா 
முத்தச் சத்தம்
என்னை வந்தடையும் போது -

நமக்குள் மறைத்துவைக்கும்
நம் கண்ணீர்த் துளிகளும் 
என்னைச் சுடும்..!

எங்கோ ஒளிந்துகொண்ட நிலவும்
எழுந்து வந்து 
என்னோடு சேர்ந்து அழும்..!!

Aug 20, 2013

அவளால் காதல் செய்வேன்...!


சற்று முன்பிருந்து 
அவள் ஞாபகங்கள்.  

மனதின் ஆழத்திலிருந்து புறப்படுகின்றன 
அவள் பற்றிய சில நினைவுகள்.

நினைவுகளில் அவள் முகம் மிதந்துவருகையில்
குளித்துக்கொள்கின்றன  என்னிரு விழிகள்.

அகிலமுறங்கிய  இரவினில், 
அறையின் ஓர் ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கும் 
என் தனிமைப் படுக்கையில்
அடிக்கடி வந்து செல்வதுதான் -  
அவளுடனான இந்நினைவுகளும், 
அவளுக்கேயான என் விழிச் சாரல்களும்..!


அவள் நினைவுகளையும், 
நினைவுகளில் அவளையும் 
விடுவதாய் இல்லை..!

உறங்கிக்கொண்டிருந்த 
என் மடிக்கணனியை
அவசர அவசரமாய்
எழுப்பிவிடுகின்றேன்.

இணையத்தை இணைத்துக்கொண்டு
எனக்கும் அவளுக்குமேயான  மின்னஞ்சலின்   
இரகசிய இலக்கத்தை
தட்டிவிடுகின்றேன்.

திறந்துகொள்கிறது
என் காதல் டயரி.

அனைத்தும் 
அவளிடமிருந்து.

நிறைய நிறைய 
காதலுடன், எனக்காக..!  



அவள் கொஞ்சல்களையும், கெஞ்சல்களையும்
மின்னஞ்சல் வார்த்தைகளாய் வாசித்துக்கொள்கின்றேன்.

என்னைக் கண்ட ஒவ்வொரு வார்த்தைகளும்
உயிர்பெற்றுத் துள்ளிக்கொண்டெழுவதைக் காண்கின்றேன்.   

நான் கேட்டும், கேட்காமலும் அனுப்பிய 
அவள் புகைப்படங்களை
ஆசை ஆசையாய்த் தேடுகின்றேன்.

ஒவ்வொன்றிலும்  
அழகழகாய் 
அவள்...!


அவள் புருவம்
அவள் விழிகள் 
அவள் நெற்றி
அவள் கன்னம்
அவள் உதடு 
அவள் நிறம்.. 

எல்லாமே 
இன்னும் என்னை 
காதல் செய்கின்றன.

பிறந்த குழந்தையை
முதல் முதலில் பார்த்து ரசிக்கும் தாய் போல் -
அவள் புகைப்படத்தை திரையிட்டு 
அதன் முன்னாலிருந்து ரசிக்கும் - நான்.

அவளை ரசிக்கின்றேனா 
இல்லை, 
நினைவுகளைத் திரட்டி
அவள் நிழற்படத்தை     
உயிர்ப்பிக்கின்றேனா...!


வலிகளையும் தாண்டிய ஏதோவொரு இன்பம்
எனக்குள் எங்கோ 
சுரந்துகொண்டிருக்கின்றது.

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்குமென் இதயம்
இடம், வலமாய் 
மாறி மாறித் துடிக்கின்றது.

கன்னம்தாண்டி வடியும் கண்ணீரை 
கண்டுகொள்ளாதிருக்கின்றன
என் விரல்கள்.

அவள் புகைப்படதிற்கு 
உயிர்கொடுத்துக் காதல் சிந்துகின்ற
என் இதழ்கள்.

இந்த இரவுகளில் 
என்னில் இம்மாற்றம்களை 
இயல்பாக்கிவிடுகின்ற 
அவள் தந்த இக்காதல்..!


பத்திரமாய் வைத்திருக்கிறேன் -
நினைவுகளை உயிர்ப்பிக்கும் 
அவள் வார்த்தைகளையும்,
நிரந்தரக் காதல் செய்யும்
அவள் நிழற்படங்களையும்..!

நான் இருக்கும்வரையில்
அவள் நினைவுகள் 
என்னில் உயிர்வாழும்,

நான் இறந்த பின்னர் 
என் கல்லறையும்  
அவள் கவி பாடும்..!

இது -
பிரிந்த காதல்தான்;
செத்துவிடவில்லை..!


என்றும் நான் -
அவளால்
அவளைக் காதல் செய்வேன்...!!

Aug 17, 2013

************************

எப்போவோ
மனிதனிடமிருந்து
கருணையை 
கற்றுக்கொண்டுவிட்டன 
மிருகங்கள்.

இன்று -
இருந்த குணத்தை 
மறந்துவிட்ட 
மனிதன், 
வியந்து பார்கிறான் -

மிருகங்களின்

இரக்க குணத்தை..!!

Aug 16, 2013

************************

ஒரு சில
மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம்..!


அற்பத்தனமான
அரசியல் இலாபங்களுக்காய் 
தன சகோதரன் உயிரை
தானே கொன்று புசித்து,
இரத்தச் சாறு அருந்தும்
இழிவான மானிடனாய்  
இருப்பைதைக் காட்டிலும் -

வன்முறை அறியா 
வாழ்க்கை செய்யும் 
ஒரு சில மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம் ..!


கருணையற்றவர்களால் 
காயப்பட்டு, 
களத்தில்
கதறியழுதவர்களிடம்  
கேளுங்கள் - இந்த
மாண்புமிகு 
மானிடனைப் பற்றி;

கீழ் சாதி 
இந்த  
மனித ஜாதி 
என்பார்...!!

Aug 14, 2013

நினைவுகளை எடுத்துச் சென்றுவிடு..!


போதும் 
உன்  நினைவுகள்,
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


விலகிப்போனபின் 
உன் நினைவுகளை மட்டும் 
என்னில் ஏன் 
விட்டுச் சென்றாய்..!

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


அழகான நம் காதலின்
அத்தனை சுவடுகளும்
அன்றாடம் நான் கடக்கும்
அனைத்து இடங்களில் ; 

காணும்போதெல்லாம்
கானல் நீராய் முன் தோன்றி -
அங்கும் இங்குமாய்
என்னை அலைக்கழிக்கும் 
உன்னுருவ நினைவுகள் 
எனக்கெதற்கு..!

திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


காதல் அரும்பிய
ஆரம்பக் காலங்களும்,  
கைகோர்த்துக் கதைபேசிய 
கடற்கரை மணல்களும்;

காவியக் கொலைகாரனாய் 
என்னைப் பார்க்கையில் -
உன்னைப்போல் 
எனக்காய் வாதாட இயலா 
இந்நினைவுகள்
இனியெதற்கு...!  

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


நிம்மதி என்பது
உன்னருக்கில் 
உணர்ந்ததுதான் 

நீ பிரிந்தபின், 
நிம்மதி தொலைத்தபின் 
உன் நினைவுகள் மட்டும்
இங்கெதற்கு..!

நிச்சயம் -
திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!



நிஜமற்ற உன்
நினைவுகள் வேண்டாம், 
நிலையாய்  என்றும்
நீயேதான் வேண்டும்.

உன் நினைவுகளை 
எடுத்துக்கொள்ளவாவது,
ஒருமுறை இங்கு
திரும்பி வந்துவிடு.

திரும்பி வந்து -
என்னையும் சேர்த்து
நீயே
எடுத்துச் சென்றுவிடு...!!   

Aug 13, 2013

************************

இன்றும் 
அதே கனவு..!

மாலை நேரக் 
கடற்கரையில் - 
என்னைத்
தொட்டுத் தொட்டுப் பேசி
காதல் செய்கிறாய்
நீ..!!

Aug 7, 2013

************************

அய்யோ..!

அவளிடம்
மட்டுமே
நிரம்பி வழிகிறது -
அத்தனை அழகும்...!!

Jul 31, 2013

************************

வழக்கம் போல்
என் திட்டுக்களை
சொந்த்தமாகிக் கொள்கிறது
நம் காதல்..!

பிறகென்ன -
இந்த ராட்சச அழகிக்கு
என் குட்டி இதயம் செய்யும் காதல் 
போதுமா என்ன..!!

Jul 30, 2013

அழகின் பேரழகி..!

அழகுதான் பெண்ணே
உன் ஒவ்வொரு அசைவுகளும்..!

ரசித்துக்கொண்டே கழிக்கின்றேன் 
என் ஒவ்வொரு பொழுதுகளையும்..!

அள்ளிக்கொள்ளதான் தெரியும்
உன் 
அத்தனை அழகையெல்லாம்;

அன்றி -
வர்ணிக்கத் தெரியா
வார்த்தைப் பிச்சைக்காரன்தான் நான்...!

நல்ல வேளை 
கம்பன் மரித்தான்;

இல்லையேல்
உன்னைப் பாட 
கையேந்திருப்பான் - அந்த
வார்த்தைக் கடவுளிடம்..!

என் மௌன பாஷைகள் 
உனக்குப் புரியும் - ஆதலால்  
மௌன  மொழிகளில் இங்கு
நான்தான் உனக்குக் கம்பன்..!

கர்வம் கொள் பெண்ணே 
என்றும் -
அழகின் பேரழகி 
நீயேதான்;

எனக்கும், 
எல்லோர்க்கும்...!!

Jul 22, 2013

************************

யாரிடமாவது 
சொல்லிக்கொள்ள வேண்டும் 
என் மனக் 
குமுறல்களை..!


இதுவரை 
அந்த யாராக 
நீ இருந்தாய்

இனிமேல் 
அந்த நீயாக  
உன் நினைவுகளிருக்கும்..!!

Jul 20, 2013

************************

தோல்விகளின் போது
சொல்லிக்கொள்ளும்
ஆறுதல் வார்த்தையினையே
அதிகம் புலம்பிக்கொண்டிருக்கிறேன் - நான்.

"இதுவும் கடந்து போகும்"

Jul 19, 2013

************************

அதிகம் நேசித்தது
உன்னைத்தான்..

அதிகம் ஆசைவைத்தது
உன்னில்தான்..

அதிகம் வலி கண்டதும்
உன்னால்தான்..!

இன்னும் -
பிறந்த குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
என் காதல்..

உன் காதல் மட்டும் -
வேக வேகமாய் வளர்ந்தது
மூப்படைந்து மரித்து 
மறைந்துவிட்டதுவோ...??

Jul 18, 2013

கொடூர மௌனம்..!


இன்னும்
எத்தனை நாட்கள்தான் 
இப்படிப் பேசாதிருந்து
என்னைக் கொல்லப்போகிறாய்..!

சண்டைகள் நமக்குள்
சாதாரணம்தான்
இருந்தும் - நீ 
பேசாது மௌனித்திருப்பது
என் மரணத்தின்
உச்சமே..!

கோபங்கொண்டு ஏசிவிட்ட
உதடுகளுக்குத் தெரிவதில்லை
மனதின் வலியும், 
கண்ணீரின் கனமும்..!

இன்று -

என் 
சுவாசத்தில்
சில தடங்கல்கள்..

என் 
நுகர்வுக்கலத்தில்
மரணத்தின் வாசனைகள்..

என்னுயிர்
பீய்த்தெடுக்கப்படுவதுபோல் 
ரண உணர்வுகள்..

வலிகள் -
இங்கு
எல்லாமே 
வலிகள்..

இவையெல்லாம் -


உன் பிரிவு
நிரந்தரம் என்பதை
எனக்குச் சொல்லும்
ஏற்பாடுகளா..??

இனியும்
கண நாள் தாங்காது
இந்த
காதல் ஜடம்;

என்னவளே -

என் 
மரணத்திற்கு முன்னராவது
உன்
மௌனம் களைப்பாயா...!! 

Jul 17, 2013

நம் காதல் செடி..!


அறிந்துகொள்
என் காதலி...!

பக்கமாய் இருந்தாலும்,
தூரமாய் சென்றாலும்;
நீ வைத்த காதல் செடி 
என்னுள்ளே -
வளர்ந்துகொண்டேதான் 
இருக்கின்றது...!

பிரிவு நோய் கொண்டு
பட்டுவிடக்கூடுமோ 
இச்செடி யென
பயந்ததில்லை நான்..

காரணம் - 

கண்கள் பார்த்து வளர்ந்த 
காதல்ச்செடி இது ;

நம் நினைவுகள் 
போதுமே 
என்றும்
உயிர்த்து நிற்க...!!

Jul 16, 2013

************************

நிஜமெது, 
நிழல்லெதுவென
பிரித்தறியும் நிதானமின்றி
காதல் போதையில் தள்ளாடும் 
காதல்காரன்தான் -
நான்...

இருந்தும்;
என் எல்லா நிலைகளிலும்
உறுதியாய் 
உளறிக்கொள்கின்றேன்
இவ்வுண்மைகளை -

"இன்று நீ இல்லை
என்பது நிஜம்...

என்னில் நீ உள்ளாய்
என்பதும் நிஜம்...!!"

Jul 15, 2013

உயிர்கொள்ளும் உன் வார்த்தைகள்..!


உன் 
ஒவ்வொரு வார்த்தைகளும்
பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன 
என்னில்..!

மீண்டும் மீண்டும்
வாசித்துக்கொள்கிறேன் நான் -
நம் நினைவுகளில் 
வசித்தபடி..!

உச்சரிப்பின்  ஓசை கேட்டு,
காதலுக்குள் கரைந்துபோன
நம் விம்பம்கள் 
உயிர்கொண்டேழுகின்றன...!


நம்
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும்
என் 
கண் முன்னே..

ஏனோ -
கதவுகளை 
அடைத்துக்கொள்கின்றன
என்னிரு கண்கள்...!


"இக்கனவுலகம் வேணாம்; 
உன் கண்கள் பார்த்து
காதல் வார்த்த 
என்
அவ்வுலகமே வேணும்..!"

அடம்பிடிக்கும் இதயம்,
இனிமேல் 
அர்த்தமில்லா துடிப்பென
அடங்கிவிடுமோ...!!


துடிதுடிக்கும் 
என்னிதயமே
இதையும் 
தெரிந்துகொள் -

நீ அடங்கினாலும் 
அருந்துவேன் 
என்னவள் ஊட்டிய இக் 
காதல் மதுவை...!!

Jul 14, 2013

கடவுளின் எழுத்து..!


புதுமையான நாடகம்தான்
இந்தக் காதல்...


அவன் - கதாநாயகனாகவும்,
அவள் - கதாநாயகியாகவும்

புதியதொரு உலகில் - பல
கற்பனைக் கதாபாத்திரங்களுடன்
காலத்தினால் அரங்கேற்றப்படும்
அநியாயமான நாடகமே -
இந்த காதல்..!


இணைவுகள்
அல்லது
பிரிவுகள்.

கால காலமாக 
இவைகள்தான்
இதன் -
இறுதி முடிவுகள்..!


இணைவோ / பிரிவோ
இரண்டிலுமே இன்பம் -

பிதற்றிகொள்ளும்
கற்பனை காவியர்கள்..!


அவனோ / அவளோ

தனக்கு கிடைப்பானா  / கிடைப்பாளா
எனும் ஏக்கத்திலும்,
இன்னும்பல எதிர்பார்ப்புக்களிலுமே
கழிகிறது - நாடகத்தின்
கணநேர காட்சிகள்..!


தான் தேர்ந்தெடுத்த 
அவனுடனோ / அவளுடனோ
வாழ்வை அமைத்துக்கொள்ள துடிக்கும்
பல சுவாரசியம்களினால் 
அலுப்பின்றி பயணித்தாலும் -

திருமணம் என்னும் 
கடைசிப் பாகத்தில்
வந்தடைகிறது
இதன் முடிவுகள்..!


கால காலமாக தொடரும்
அதே முடிவுகள்..!

இணைந்தவர் 
நிஜவுலகில் இனிக்கிறார், 

பிரிந்தவர்
நினைவுலகில் மிதக்கிறார்..!


"அநியாய நாடகமா..?
காதலையா கொச்சைப்படுத்துகிறாய்...?
இவன் ஒரு காதல் துரோகி" யென
பொங்கியெழும் கதாநாயகர்களே / நாயகிகளே 

கொஞ்சம் பொறும் -
என் காரணத்தையும் கேளும்.


நானும் ஒரு கதாநாயகனே..!!


கடவுளின் ஏட்டில்
காதலனுக்கு காதலி, 
காதலிக்கு காதலன்
ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனராமே..!


திரையிடப்பட்ட இவ்வுண்மையை
அறியா நாம் -
மனங்களை மாற்றிக்கொண்டிணைய  
முயல்கிறோமே...!


நியாயமானதாக வேஷமிடப்பட்ட
அநியாயமில்லையா இது..??


கற்பனைகள் தவறில்லை, 
கனவுகளும் தவறில்லை.
இவை -
இருவருக்கும் 
இருந்தால் மட்டும் போதுமா..!

கடவுளின் ஏட்டிலும் 
எழுதபட்டிருக்க வேணுமே..!!

Jun 20, 2013

உன் காதல்..!


உனக்கு தேர்வு நெருக்கியிருந்த சமயம்தான், நமக்குள் காதலும் பிறந்தது. 
அன்றிலிருந்து நம் கைபேசிகள் கதைக்காமல் இருந்ததில்லை...

அதிக நேரம் பேசி உன் படிப்பை கெடுக்க வேணாம், 
கொஞ்சம் போல பேசுவோம் என்றுதான் ஆரம்பிப்பேன் ஒவ்வொரு முறையும்...

கடைசியில், மணிக்கணக்கில் கதைத்த பிறகு - 
"போதும் கொஞ்சமாச்சும் படி..... 
இப்படியே பேசிட்டிருந்தால், 
தேர்வு எழுதும்போது என்னைத்தான் திட்டுவாய்..." 
என்று சொல்லி வைத்துவிடுவேன்...

ஒரு பத்து நிமிடம் போனதும், 
மீண்டும் என் கைபேசியில் நீ அழைப்பாய்...

"என்ன..?"

"இவளவு நேரமும் படித்துவிட்டேன், கொஞ்ச நேரம் பேசுவோமே...!!" 
கெஞ்சலுடன் கேட்பாய் நீ...

செல்லமாக கூட திட்ட முடியாமல் 
சிரித்தே விடுவேன் நான் - 
வழிந்துகொண்டிருக்கும் உன் காதலை உணர்ந்தவனாய்..!!

Jun 19, 2013

ரோசக்காரி..!


கோபத்தில்
கத்தியே விட்டேன் -
"பேசாதே.... போய்விடு."
என்று...

ஒரு நிமிடம்தான்
என் கோபத்தின் 
மொத்த
ஆயுட்காலமும்...

அடுத்த நொடியிலிருந்து
ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்
நீ பேசும்
ஒற்றை வார்த்தைக்காய்...

ரோசக்காரி 
நீ -

இன்றுடன் 
ஒரு வாரமாகிறது
என்னுடன் 
நீ பேசி...

"நீ வந்து 
பேசிருக்கலாம்தானே..?"
என்னை பார்த்து
நீயும் கேட்கக்கூடும்..

நியாயமான கேள்விதான்
ஆனாலும், 
என்னை தடுப்பது 
எதுவோ..?

ஆண் என்ற
ஆணவமா..?
அல்லது, 
பிழை என்னில்லில்லை என்கின்ற
பிடிவாதமா..?

எதுவாகவோ இருந்துவிட்டு 
போகட்டும், ஆனாலும்
ஒன்றை மட்டும்
புரிந்துகொள்

"உன்னுடனான என்
காதல் மட்டும்தான் 
நிரந்தரம், -
கோபமில்லை..."   

Jun 18, 2013

காதல்மனைவிக் காதல்..!


அதிகாலை நேரம்
சீக்கிரமே விழித்துக்கொண்டேன்,
அருகில் நீ 
அசந்து தூங்குகிறாய்..!


சற்று நேரம்
பால்கனியில் நின்றுகொண்டிருந்தபடி,
என்னை மறந்து
எதையோ யோசித்துக்கொண்டிருந்தேன் -

கையில் காபியுடன் 
என்னருகில் வந்து
என்னில் சாய்ந்துகொண்டபடி 
"இன்னும் கோபமாபா..?" என
நீ கேட்கும்வரையில்.


நினைவுகள் களைய,
நிதானத்துக்கு வந்தவனாய்
உன் முகம் பார்த்தேன்..!

"இரவு அப்படி பேசினதுக்கு Sorry  என..."
என்கிறாய்,
கொஞ்சலான பார்வையுடன்..!


அடி கள்ளி -
கண் விழித்ததும்
வழக்கம் போல
உன் தலை கோதி, 
கன்னத்தில் முத்தமிட்டேனே
கவனிக்கவில்லையா..??

இல்லை -
நீ கவனித்திருப்பாய்...!


புன்னகைக்கிறேன்

எந்த கவலையும் இல்லா 
குழந்தையாய் மாறி,

இன்னும் இன்னும்
பிடித்துப்போகிறது உன்னை..!


புன்னகைத்தபடியே நெஞ்சோடு 
உன்னை சேர்த்துக்கொள்கிறேன், 

புரிந்து கொண்டவளாய்
என் நெஞ்சுக்குள்ளேயே 
கண் மூடுகிறாய்..!


இரண்டே வயதுதான் ஆகிறது
நம் திருமணதிற்கு,  

இப்போவும் 
ரொம்ப அழகானது
நம் காதல்...!!

Jun 15, 2013

************************

எங்கோ வாசித்த வரிகள் -

"எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை"

ம்ம்ம்... 
எதார்த்தமான உண்மைதான்,

உள்ளம்கள் பீய்க்கப்பட்ட  பின்னே
உணர்ந்துகொள்ளப்படுகின்றன..! 

Jun 12, 2013

************************

உன் இதழோரம்
ஏதோவொன்று கடித்துவிட்ட
தழும்பைக் காட்டி
"வலிக்கிறது" என
சிணுங்குகிறாய்...

நெஞ்சோடு உன்னை
அள்ளி அணைத்தபடி
அங்கும் இங்குமாக தேடுகிறேன் -

கடித்துச் சென்ற 
அச் சிறுஜீவன்
கையில் அகப்படாதா என்று..!